தெய்வீகத்துடன் ஆழமான தொடர்பை அனுபவிப்பதில் நான்கு நிலைகள் உள்ளன.
1. சாமீப்யம்
இதன் பொருள் நாம் தெய்வீகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் மிகவும் அன்பானவர்கள் என்பதை உணருவதாகும். இப்போது இந்த அனுபவம் உங்களுக்கு எப்போது கிடைக்கும்? நாளை, நாளை மறுநாள், 10 நாட்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு இந்த நெருக்கத்தை நீங்கள் உணர்வீர்களா? இல்லை! இப்போதே, இந்த நொடியில், நீங்கள் தெய்வீகத்திற்கு மிக அருகில் இருப்பதாக உணருங்கள். ஒரு குரு இதைச் செய்கிறார். தெய்வீகத்துடனான அந்த நெருக்கத்தை உணர ஒரு குரு உங்களுக்கு உதவுகிறார்.
2. சந்நிதானம்
சந்நிதானம் என்பது தெய்வீக இருப்பை உணர்வது அல்லது அதை வரவழைப்பதாகும். நீங்கள் தியானம் செய்யும்போது, தெய்வீகத்தின் இருப்பை உணர்கிறீர்கள்; அந்தப் பிரசன்னத்தை அனுபவிக்கிறீர்கள்
உதாரணமாக, நாம் எல்லா நேரங்களிலும் காற்றினால் சூழப்பட்டிருக்கிறோம், ஆனால் அதன் இருப்பை நாம் எப்போதும் உணருவதில்லை. நீங்கள் ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள காற்றின் இருப்பை உணர்கிறீர்கள். அதேபோல், நாம் எப்போதும் இறைவனால் சூழப்பட்டிருக்கிறோம், ஆனால் அவருடைய பிரசன்னத்தை நாம் உணருவதில்லை. அந்தத் தெய்வீக இருப்பை அனுபவிப்பதற்காகவே, நாம் யாகங்கள், பூஜைகள் செய்கிறோம் மற்றும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.
3. சாரூப்யம்
சாரூப்யம் என்பது தெய்வீகத்தை உங்களுக்குள்ளும், எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து வடிவங்களிலும் காண்பதாகும். ‘தெய்வீகம் எனக்குள் இருக்கிறது, நானும் தெய்வீகமே’ என்று உணர்வதே இதன் பொருள். தெய்வீகம் என் வடிவத்திலும், என்னைச் சுற்றியுள்ள அனைத்து வடிவங்களிலும் நிறைந்திருக்கிறது என்பதை உணர்வதாகும். வடிவம் அற்றதாக இருந்தாலும், தெய்வீகம் எல்லா வடிவங்களிலும் நிறைந்திருக்கிறது.
4. சாயுஜ்யம்
இறுதி நிலை சாயுஜ்யம் அதாவது தெய்வீகத்துடன் முழுமையாக ஒன்றாக உணருதல், உங்களுக்கும் தெய்வீகத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் தெரியாத அளவுக்கு முழுமையாக இணைதல். இந்த நிலையில், இரண்டு இல்லை (இரட்டைத்தன்மை இல்லை), ஒன்று மட்டுமே உள்ளது. இந்த முழுமையான ஒருமையை ஆழ்ந்த அமைதியில், இருப்பின் அமைதியில், நீங்கள் தெய்வீகத்துடன் முழுமையாக ஒன்றாக இருக்கும்போது மட்டுமே அனுபவிக்க முடியும்.
இவை சமாதியின் நான்கு நிலைகள். சமாதியில் (ஆழ்ந்த ஓய்வு), நாம் பரம்பொருளுடன் – அதாவது சிவனுடன் – ஒன்றுபடுகிறோம்.





